*கவர்ச்சி நடிகை குயிலி காட்டிய கவர்ச்சி*

குல்நார் என்கிற இயற்பெயர் கொண்ட குயிலி ஆரம்ப காலத்தில் ஸ்டார் ஹோட்டல்களில் இசைக்கு நடனமாடித்தான் வாழ்க்கை நடத்தி இருந்தார். அதைப் படித்ததினால் எனக்கு அப்படி தோணுச்சோன்னு தெரியல. குயிலி பூவிலங்கு படத்தில் நடிச்ச சில காலங்களில் அவரோட சட்டையில்லாத முதுகுப்பக்கப் படத்தை திரைச்சித்ரா அப்படிங்கிற பத்திரிக்கை வெளியிட்டது. அதனாலயான்னும் தெரியல. அல்லது அந்த இடுங்கிய கண்களான்னு தெரியல. குயிலியுடைய முகத்துல ஒரு சோகம் இருக்கும். எதுனாலயோ அவரிடம் ஒரு பரிதாபம் தோணும்.

பாலச்சந்தர் பொய்க்கால் குதிரையில் சிறிய ரோல் கொடுத்தாலும், கல்யாண அகதிகளில்நடித்தாலும் ‘பூவிலங்கு’ படம் ரிலீசான போது முதல் காட்சியே பார்த்ததும் படம் பிடிச்சிடுச்சு. முரளியோட துள்ளல் நடிப்பும், செந்தாமரையோட வில்லத்தனம், கல்லூரி, அழகான பாடல்கள் இதோட குயிலியும் பிடிச்சிருந்தது. ஆனா முரளிக்கு முன்னாடி குயிலி வயதான பெண் மாதிரியான தோற்றம் தந்தது நிச்சயம் அந்தப்படத்தோட கேமராமேன் தவறுன்னு தான் சொல்லணும். ஏனோ அதுக்கப்புறம் குயிலியை நாயகியா பின்னே அதிகம் படங்களில் காணவில்லை. அந்த நேரத்தில் குயிலிக்கு டூப் மாதிரியே மோகனப்ரியான்னு ஒரு நடிகை நடிச்சிட்டிருந்தாங்க.

நாயகன் படத்தில் பல ஆச்சர்ய திருப்பங்கள் நம்மை புருவம் உயர வைக்கும். அதில் ஒண்ணு தான் குயிலியோட நிலா அது வானத்து மேலே பாட்டு. யாருமே நினைச்சுப்பார்க்காத திருப்பம். ஒரு பாலச்சந்தர் நாயகி கவர்ச்சி நடனத்துக்கு இறங்கி வருவார்னு. அதுவும் அந்தப்பாட்டு எடுத்த சூழல் புதுசா இருந்தது. ராஜாவின் குரலும் கச்சும் கச்சும் கூட புதுசா இருந்தது.

அப்பவே முடிவாயிடுச்சி. கவர்ச்சி நடனம்னா குயிலி தான்னு. கட்டுக்கடங்காத காளையான முரளியோட கையில தன் தலையில வச்சிருக்கிற பூவால விலங்கு போட்டு இனிமா யாரையும் அடிக்க கை ஓங்கக்கூடாதுன்னு சொல்லி “போட்டேனே பூவிலங்கு. அன்பாலே நீ அடங்கு”ன்னு பாடின அதே பெண் தான் “போய்யா…என்னோடு மல்லுக்கட்ட வாய்யா”ன்னு வேதாளம் வந்து நிக்குதுன்னு ஆடும் சூழல் ஏற்பட்டது தமிழ் ரசிகர்களால் தான்னு சொன்னா மிகையில்லை.

மனோவோட மெஹபூபா மெஹபூபா குரலோடு ஷைலஜாவோட அழுத்தமான குரலில் கமலோட ஏரோபிக்ஸுகளுக்கிடையே குயிலி அசராம ஆடினதுக்கு குயிலியோட டான்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் தான் காரணம். அதோடு தூங்காதே தம்பி தூங்காதேயில் வானம் கீழே வந்தாலென்ன பாடலுக்கும் கமலோடு ஆடிய அனுபவமும் அவருக்கு இருந்தது வசதியாப்போச்சு. இந்த மூணு பாட்டுக்கப்புறம் நாலாவதா கமலோடு ‘அடிச்சிடு கொட்டம் விடியற மட்டும்’ அவ்வளவா எடுபடலை. குயிலி மேலே இருக்கும் பரிதாப உணர்ச்சியைத்தான் அது கூட்டியது.

சின்னப்பதாஸ் படத்துல ‘பாக்கு வெத்தல வச்சுக்க..வச்சுக்க’ பாட்டு தனி ஃப்ளேவர். (கார்த்திக்கோட) ‘ஜவ்வாது சந்தனப்பூவு’ அப்படிங்கிற மழைப்பாடல் அன்றைய மிட்நைட் மசாலா..சோலைக்குயில் படத்தில் முராரியோட இசையில் ‘மலைநாட்டு மச்சானே’ அசல் காட்டுவாசி காதல் பாடல். அது அச்சு அசலா இளையராஜா சில்க்குக்காக போட்ட ‘புழையோரத்தில் பூந்தோணி எத்தியில்லா’ என்கிற மலையாளப்பாட்டிலிருந்து எடுக்கப்பட்ட பேட்டர்ன். புதியபாதை படத்தில் (பார்த்திபனோடு) ‘கண்ணடிச்சா கல்லெடுப்பேன் கருப்பு மூஞ்சிக்காரி’ பாட்டும் குயிலியோட ஸ்பெஷல் தான்.

இந்த டான்ஸ் கூத்துகளுக்கிடையே ‘உன்னை சொல்லிக்குற்றமில்லை’ படத்தில் அமீர்ஜான் தன் நாயகிக்கு கொஞ்சம் நல்ல ரோலை தந்திருந்தார்னு சொல்லலாம்.

திடீர்னு பார்த்தா ஜோதிகா அம்மாவா ஒரு படத்துல வர்றாங்க குயிலி…அட….அந்த ‘பூவிலங்கு’ போட்டவங்களா இவங்க. நிறைய அம்மா ரோல்கள். அதன் பின் டிவி சீரியல்களில் ஒரு கலக்கு. அது வரை தனக்கிருந்த நடிப்புப்பசியையெல்லாம் டிவி சீரியல்களில் சாப்பிட்டு போக்கிக்கிட்டாங்கன்னு சொல்லலாம்.

விதவிதமான பாத்திரங்கள். விதவிதமான நடிப்பு. சீரியல்களில் நல்ல பெயரும் கிடைத்தது அவருக்கு. ஆனாலும் பெரியத்திரை அவரை நிராகரித்தது வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்.

பாலிவுட்டை சேர்ந்த ஸ்டண்ட் இயக்குனரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயான குயிலி சிலகாலம் நடிப்பை விட்டு ஒதுங்கி இருக்கார்னு தோணுது.

குல்நார்….மறக்கமுடியாத நடிப்பு…..